ரூ.45,000 வருமானம் தரக்கூடிய சூப்பர் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
Post Office Recurring Deposit Fund Scheme Details
Post Office Recurring Deposit Fund Scheme Details: பலரும் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களைத் தேடி வருகின்றனர். மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஃபிக்சட் டெபாசிட் (FD) போன்ற திட்டங்களில் விருப்பம் இருந்தாலும், பெரும்பாலான மக்கள் அஞ்சல் அலுவலகத் திட்டங்களையே அதிகம் விரும்புகின்றனர்.
இதற்குக் காரணம், சந்தை அபாயங்கள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானம் தரும் திட்டங்களாக அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் உள்ளன.
அந்த வகையில், மாதம்தோறும் ஒரு சிறிய தொகையை சேமித்து, ஐந்து ஆண்டுகளில் கணிசமான வட்டியைப் பெற உதவும் ஒரு சிறந்த திட்டம், தபால் அலுவலக தொடர் வைப்பு நிதி (Post Office Recurring Deposit) ஆகும்.
இந்தத் திட்டத்தில், மாதம் ரூ.4,000 முதலீடு செய்வதன் மூலம், ஐந்து ஆண்டுகளில் வட்டியாக மட்டும் சுமார் ரூ.45,459 வரை பெற முடியும். இந்த திட்டத்தின் மற்ற முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
தொடர் வைப்பு நிதி திட்டத்தின் சிறப்பம்சங்கள்
தொடர் வைப்பு நிதி திட்டம் இந்திய அஞ்சல் துறையால் வழங்கப்படும் ஐந்து வருட கால வைப்பு திட்டமாகும். இதில், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்.
இந்த முதலீட்டிற்கு, அரசு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கிறது. தற்போது, செப்டம்பர் 2025 நிலவரப்படி, இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிட்டு சேர்க்கப்படுகிறது (Compounded Quarterly).
ரூ.45,459 வட்டி பெறுவது எப்படி?
- மாதாந்திர முதலீடு: ரூ.4,000
- முதலீட்டு காலம்: 60 மாதங்கள் (5 வருடங்கள்)
- மொத்த முதலீடு: ரூ.4,000 x 60 = ரூ.2,40,000
- தற்போதைய வட்டி விகிதம்: 6.7%
மேற்கண்ட கணக்கீட்டின்படி, ஐந்து ஆண்டுகள் முடிவில், நீங்கள் முதலீடு செய்த ரூ.2,40,000-க்கு, வட்டியாக மட்டும் தோராயமாக ரூ.45,459 கிடைக்கும்.
மொத்த முதிர்வு தொகையாக நீங்கள் கிட்டத்தட்ட ரூ.2,85,459 பெறுவீர்கள். இது பங்குச் சந்தை போன்ற அபாயகரமான முதலீடுகளில் ஈடுபட விரும்பாதவர்களுக்கு ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான வருமானமாகும்.
திட்டத்தின் மற்ற முக்கிய அம்சங்கள்
- இது மத்திய அரசால் ஆதரிக்கப்படும் திட்டம் என்பதால், உங்கள் முதலீட்டிற்கு 100% பாதுகாப்பு மற்றும் உத்தரவாதமான வருமானம் உண்டு.
- மாதம் குறைந்தபட்சம் ரூ.100 முதல் முதலீட்டைத் தொடங்கலாம். அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை.
- ஓராண்டு முடிந்த பிறகு, உங்கள் கணக்கில் உள்ள தொகையில் 50% வரை கடனாக பெறும் வசதி உள்ளது.
- கணக்கு தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, தேவைப்பட்டால் கணக்கை முன்கூட்டியே முடித்துக்கொள்ளும் வசதியும் உண்டு.
- ஐந்து வருட முதிர்வு காலத்திற்குப் பிறகும், விரும்பினால் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.
- பெரியவர்கள் தனியாகவோ அல்லது மூன்று பேர் வரை கூட்டாகவோ இந்த கணக்கைத் தொடங்கலாம்.
- 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் பெயரிலும் இந்த கணக்கைத் தொடங்க முடியும்.